நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும்? பரபரப்பு தகவல்கள்
Recommended Video
டெல்லி: அமெரிக்கா-ஈரான் இடையே, போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது.
இதனால் கடும் ஆவேசமடைந்துள்ள ஈரான், இந்த தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் என்று கூறியுள்ளது. எனவே இரு நாடுகள் நடுவே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங்
போர் பதற்றம்
இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அடுத்து என்ன ஆகும்? அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், போர் பதற்றமே போதும்.. சாமானியர்கள் வாழ்க்கையை புரட்டிப் போட.. அது எப்படி என்கிறீர்களா? நாளை முதலே அதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துவிடும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.
முன்பு நடந்தது என்ன?
இப்படித்தான், ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2004ஆம் ஆண்டு அமெரிக்கா-ஈராக் போரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரே இரவில் பேரலுக்கு பத்து டாலர்கள் ஏறிய விலை, திடீரென 20 டாலர்கள் குறைந்தது. இப்படி சீரற்ற நிலை காணப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது அந்த அளவுக்கு நிலைமை மோசமாகாது என்கிறார்கள். எரிபொருள் உற்பத்தி செய்யும் இடம், அது சுத்திகரிக்கப்படும் இடம் என எல்லாம் இந்த 16 ஆண்டுகளில் மாறி இருக்கிறது. முன்பு நடந்தது போல இப்போது நடக்காது என சற்று ஆறுதல் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள், அதற்காக தாக்கமே இருக்காது என சொல்லிவிட முடியாது என சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.
சவுதி தாக்குதல்
இதற்கு சமீபத்தில் நடந்த உதாரணம் சாட்சி. சவுதியிலுள்ள அராம்கோ எரிபொருள் உற்பத்தி நிலையம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டது. இதனை அடுத்து பெட்ரோல் விலை கிடுகிடுவென ஏறும் என்ற பயம் இருந்தது. நல்லவேளையாக சில நாட்களில் பெட்ரோல் விலை மறுபடியும் கட்டுக்குள் வந்தது.
இதற்கு முக்கிய காரணம் எரிபொருள் வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் தாக்கம் இப்போது குறைந்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா
உலகின் பெரியண்ணன், அமெரிக்கா இப்போது, மத்திய கிழக்கு நாடுகளை தங்கள் எரிபொருள் தேவைக்காக சார்ந்து இல்லை. வடக்கு அமெரிக்காவில் அளவுகடந்த அளவுக்கு எரிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம், இந்தியாவின் நிலைமைதான், சற்று சிரமம். பிற நாடுகள் டாலரில் எண்ணையை விற்பனை செய்யும் நிலையில், இந்தியாவோ ஈரானிடமிருந்து பணம் மூலம் வர்த்தகம் செய்தது. இது இந்திய அன்னிய செலவாணியை மிச்சப்படுத்தியது.
இந்தியாவின் நிலைப்பாடு
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த பிறகு, ஈரானில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக ஈரானை சாராமல் இருக்க முடியவில்லை. ஈரான் தளபதி கொல்லப்பட்ட நாளிலேயே, உலகம் முழுக்க கச்சா எண்ணை விலை 4 சதவீதம் அதிகரித்தது. வார விடுமுறை தினங்களை கழித்துவிட்டு, நாளை சந்தை திறக்க உள்ளதால், கச்சா எண்ணை விலை அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது. எனவே, நாளை, பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, முடிந்த அளவு, இன்றே எரிபொருளை நிரப்பிவிடுவது நல்லது.