இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்
டெல்லி: தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரக் கால அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அளித்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஜனவரி மாத தொடக்கத்தில் அனுமதி அளித்திருந்தது. சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசி விநியோகிக்கும் பொறுப்பு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாரத் பயோடெக் சொந்தமாக கோவாக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
பைசர் விண்ணப்பம்
இருப்பினும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் முன்னரே அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடனேயே அவசரக்கால அனுமதி வேண்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியே பைசர் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.
கூடுதல் தகவல்கள்
பைசர் நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமே தனது மருத்துவ சோதனைகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும், அவசர நிலையைக் கருத்தில் இந்தியாவில் மருத்துவ சோதனையை மேற்கொள்ளாமலேயே அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், மருத்துவ சோதனைகள் குறித்துக் கூடுதல் தகவல்களை அளிக்குமாறு பைசர் நிறுவனத்திடம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டது.
திரும்பப் பெற்றுக்கொண்ட பைசர்
இந்நிலையில், பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டிஜிசிஐ கேட்டுள்ள கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு, மீண்டும் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் ஃபைசர் அறிவித்துள்ளது. டிஜிசிஐ அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் விரைவில் இந்தியாவிற்குத் தேவையான தடுப்பூசியை வழங்க முடியும் என நம்புவதாகவும் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.