“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..!
ஒரு வயது சிறுவன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
டெல்லி: ஒரு வயது சிறுவன் ஒருவன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
சமூகவலைதளங்களில் ஏராளமான விநோதமான, மனதை கவரும் புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில நம் மனதை நெகிழ வைத்துவிடும். அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட அந்த புகைப்படங்களில் ஒரு வயதேயான சிறுவன் ஒருவன் தான் வைத்திருக்கும் பையில் இருந்து தானியங்களை எடுத்து கீழே போடுகிறான். பின்னர் அந்த தானியங்களை ஏராளமான சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிடுகின்றன. அதை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் அந்த சிறுவன்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சிறுவனின் தந்தை, தனது மகனின் செயலை பார்த்து பெருமிதம் கொண்டிருக்கிறார். "ஒரு வயதேயான எனது மகன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளித்து, அவை சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனது இந்த உணர்வு எப்போதும் இருக்கும் என நம்புகிறேன். குறைந்தபட்சம் 20 சிட்டுக்குருவிகளையும், 2 புறாக்களையும் பார்க்க முடிந்தது", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுவனை புகழ்ந்து வருகின்றனர். குழந்தைகளை இது போன்று பழக்கப்படுத்தி வளர்ப்பது, அவர்களுள் மனிதத்தை நிரம்ப செய்யும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். பறவைகளுக்கு உணவளிப்பது மிக உன்னதமான பொழுதுபோக்கு எனவும், குழந்தைகளுக்கு அவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்ப்பதன் மூலம், குழந்தைகளை நாளைய இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.
சட்டமன்றத் தேர்தல்... அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும்... எல்.முருகன் திட்டவட்டம்