பிபிசி ஆவணப் படம்- மத்திய அரசின் தடை க்கு எதிரான வழக்கு- பிப் 6-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
பிபிசி ஆவணப் படம் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
டெல்லி: குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப் படத்தை வெளியிடுவதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு மீது பிப்ரவரி 6-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி பதவி வகித்தார். அப்போது சாதுக்கள் பயணித்த ரயில் பெட்டி தீக்கிரையானது. இதில் சாதுக்கள் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் மதமோதல் வெடித்தது. 2002-ல் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட மத மோதல்களில் 1,000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நாடு விடுதலைக்குப் பின்னர் நிகழ்ந்த மிக மோசமான மதவன்முறையாக 2002 குஜராத் கலவரம் விமர்சிக்கப்பட்டது. உலக நாடுகளும் குஜராத் மத மோதல்களை கடுமையாக கண்டித்தன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
12 நாட்கள் தங்குகிறேன்.. தெருத் தெருவாக மக்களை சந்திக்கப் போகிறேன்.. ஈரோட்டில் சீமான் அறிவிப்பு!
இந்நிலையில் பிபிசி ஊடகமானது 2002 குஜராத் படுகொலைகள், பிரதமர் மோடி முன்வைத்து 2 தொகுப்புகளாக ஆவணப் படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப் படம் பெரும் சர்ச்சையானது. இதனால் "India: The Modi Question" என்ற தலைப்பிலான பிபிசி ஆவணப் படத்தை சமூக வலைதளங்களான யூ டியூப், ட்விட்டரில் மு9டக்க மத்திய அரசு உத்தரவிட்டது என செய்திகள் வெளியாகின.
இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றன. டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா என பல மாநிலங்களில் பாஜக ஆதரவு அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்கு போட்டியாக பாஜக ஆதரவாளர்கள், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஒளிபரப்பினர்.
தமிழ்நாட்டிலும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. சில இடங்களில் போலீசார் அனுமதிக்காமல் கைது செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் முறைப்படியான அனுமதி பெற்று இந்த ஆவணப்படம் ஒளிபரப்பவும் செய்யப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிபிசி ஆவணப்படம் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி, 2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படம் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எம்எல் சர்மா இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் இந்த தடையானது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தமது மனுவில் எம்எல் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்பாக எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்று பிப்ரவரி 6-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.