ஆண்-பெண்ணுக்கு ஒரே திருமண வயதை நிர்ணயிக்க கோரி வழக்கு.. மத்திய அரசு பதில்
டெல்லி: ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கு ஒரே வயதை நிர்ணயிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பாஜக தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள குறைந்த பட்ச வயது 18 வயது என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் நிர்ணயிப்பது அப்பட்டமான பாகுபாடு. திருமணமான பெண்கள் கணவருக்கு அடிபணிந்து வாழ்வது ஒரு சமூக யதார்த்தமாக திகழ்கிறது. திருமண வயது ஏற்றத்தாழ்வால் இன்னும் மோசமடைந்துள்ளது என அஸ்வினி குமார் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் திருமண வயதில் உள்ள வேறுபாடு பாலின சமத்துவம், பாலின நீதி மற்றும் பெண்களின் கௌரவம் ஆகியவற்றை மீறுவதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி சி ஹரி சங்கர் முன்னிலையில் நடந்து வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருமண வயது தொடர்பான இந்த மனு பல்வேறு திருமண சட்டங்களை குறிக்கிறது.
பட்டாசு வெடிக்க.. கலை நிகழ்ச்சிகள் கலகலக்க.. சிட்னியைக் கலக்கிய தமிழ் தீபாவளி!
இதற்கு சட்ட அமைச்சகத்தின் கருத்துக்களும் தேவை. குழந்தை திருமணத்தை தடைசெய்யும் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து சட்ட அமைச்சகம் ஆலோசனைகளை நடத்தியது.சட்ட அமைச்சகத்தின் கருத்துக்கு பிறகு இதில் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு வரும் பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.