சமூக வலைதளங்களை கண்காணிக்க கூடாது.. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்களை கண்காணிக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய தகவல் ஒளிப்பரப்பு அமைச்சம் ஒரு கொள்கை முடிவினை எடுத்து அறிவித்தது.
அதனை எதிர்த்து டிஎம்சி கட்சியை சேர்ந்த எம்பியான மொய்த்ரா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவின் விசாரணையில் பங்கேற்ற மத்திய அரசின் வழக்கறிஞர், அரசின் முடிவு மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் இருக்குமானால், அதனை ஒரு போதும் முன்னெடுக்காது என்று கூறினார்.
இதனை அடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், மத்திய அரசு மீண்டும் சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முடிவினை எடுத்தது.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.
அந்த அனுமதியின்படி, நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கண்காணிப்பது, பரிமாறப்படும் தகவல்களை தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடைமறிப்பது, தகவல்கள் அனுப்புவதை தடை செய்வது உள்ளிட்ட பணிகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மக்களை கண்காணிக்கும் உரிமை யாருக்குமில்லை என்றும், இந்த முடிவை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் நீதிமன்ற விடுமுறை காலம் முடிந்து வரும் ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.