சிறைவாசம் அனுபவிக்கும் 'பிஞ்ச்ரா தோட்' நடாஷா நர்வாலின் தந்தை கொரோனாவுக்கு பலி
டெல்லி: வடகிழக்கு டெல்லி வன்முறைகளில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் அமைப்பான பிஞ்ச்ரா தோட் இயக்கத்தின் உறுப்பினரான சிறையில் வாடும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால்( வயது 71) கொரோனாவால் உயிரிழந்தார். தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்க நடாஷா நர்வாலுக்கு 3 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் மீதான பாலின பாகுபாட்டுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து டெல்லி கல்லூரிகளின் முன்னாள் மாணவிகளைக் கொண்டு 2015-ல் உருவான இயக்கம்தான் பிஞ்ச்ரா தோட். 2015-ல் ஜாமியா பல்கலைக் கழகத்தின் மாணவிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இருந்து பிஞ்ச்ரா தோட் விஸ்வரூபம் எடுத்தது.
2019-ல் நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. இப்போராட்டங்கள் 2020-லும் தொடர்ந்தன. கடந்த ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. இந்த மோதல்களில் 53 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியர்கள் மர்ம நபர்களால் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடூரமாக தாக்கப்பட்டனர்.
வடகிழக்கு டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்ததில் பிஞ்ச்ரா தோட் அமைப்பும் முக்கிய பங்கு வகித்தது. இதனால் பிஞ்ச்ரா தோட் உறுப்பினர்கள் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந் தேதியன்று ஊபா எனும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பிஞ்ச்ரா தோட் உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் நடாஷா நிர்வால்.
தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஹரியானா வேளாண் பல்கலைக் கழகத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற விஞ்ஞானி நடாஷா நர்வால். இவரது தந்தை மகாவீர் நர்வால், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர். கடந்த ஓராண்டாக மகளின் வழக்கு விவரங்களுக்காக இடைவிடாத பயணம் மேற்கொண்டவர்.
சிறையில்வாடிய மகளை ஒருமுறை கூட சந்திக்க மகாவீர் நர்வாலை மத்திய அரசு அனுமதிக்கவும் இல்லை. அண்மையில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டார் மகாவீர் நர்வால்.
டெல்லி ரோக்டக் மருத்துவமனையில் மகாவீர் நர்வாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமையன்று மகாவீர் நர்வால் உயிரிழந்தார்.
நடாஷாவின் சகோதரர் ஆகாஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மகாவீர் நர்வால் உயிரிழப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இடைக்கால ஜாமீன்
இதனிடையே தந்தை மகாவீர் நர்வாலின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நடாஷாவுக்கு 3 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. டெல்லி போலீசார் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் வழக்கு பற்றி எதுவும் பேசக் கூடாது; ரூ50,000 சொந்த ஜாமீன் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் நடாஷாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்திருக்கிறது.