சீரியஸ் நோயாளிகளும் மீள்கிறார்கள்.. அசத்தும் பிளாஸ்மா சிகிச்சை.. ஹேப்பி நியூஸ் சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி: கொரோனா வைரஸ் சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள், பிறர் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் ரத்த பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளிகள் உடல்நிலை நல்ல நிலையில் தேறியுள்ளதாக பேட்டியின்போது உடனிருந்த, கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தின் (ஐ.எல்.பி.எஸ்) இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சரின் தெரிவித்தார். இதில் 2 நோயாளிகள் வென்டிலேட்டர்கள் மூலம் சிகிச்சையளிக்கும் நிலையில் இருந்தனர். இப்போது இருவரும் ஐ.சி.யுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளனர்.
கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், பிளாஸ்மா சிகிச்சைக்காக, கடந்த வாரம் மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்தது, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை கிடைத்த முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. மீதமுள்ள தீவிர நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இப்போது மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். அடுத்த வாரம், இதுபோன்ற சிகிச்சை விரிவுபடுத்தப்படும்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கேஸ்கள் பதிவாகியுள்ளன, மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,376 ஆக உள்ளது. குணமடைந்த பின்னர், 808 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், டெல்லியில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் கோவிட் -19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 23,077 ஆக உயர்ந்ததாக சுகாதார மற்றும் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.