தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ரொம்ப அதிகம்… தடைவிதித்தது பசுமை தீர்ப்பாயம்
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது .
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருள்கள்
அந்த வகையில், பிளாஸ்டிக் பொருட்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமாக பயன்படுத்தப்படுவதாகவும், அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், உள்ளிட்டவை பிளாஸ்டிக் பொருட்களால் அலங்கரிக்கபடுவதாகவும் கூறப்படுகிறது.
தீர்ப்பாயத்தில் மனு
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு வில்சன் என்பவர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் உபாத்யாய் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் தலைமையிலான அமர்வு, தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
ஏற்கனவே, தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.