மகளின் கல்விக்காக சேமித்த ரூ 5 லட்சத்தில் ஏழைகளுக்கு உதவிய மதுரை மோகன்.. மோடி பாராட்டு
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் ஏழை மக்களுக்கு உதவிடுவதற்காக தனது மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த ரூ 5 லட்சத்தில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்த மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகனை பிரதமர் பாராட்டினார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரம் காரணமாக 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அது போல் நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளை அளித்ததோடு வழிகாட்டும் நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்த நிலையில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கீ பாத் எனும் ரேடியோ நிகழ்ச்சியில் இன்றைய தினம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
அவர் கூறுகையில் ஒவ்வொரு இந்தியரும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அங்கம் வகிக்கின்றனர். கொரோனா எதிர்ப்பு களத்தில் முன்னணியில் நிற்கும் களவீரர்களுக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிரான இந்திய மக்களின் சேவா சக்தி வெளிப்படையாகவே உணரப்பட்டுள்ளது.
மன்கிபாத் உரையில் கடந்த முறை பொதுபோக்குவரத்துகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்திருந்தேன். தற்போதைய மன்கிபாத் உரையின் போது பொது போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இடம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு எதிரான புதிய வியூகங்கள் அனைத்து தரப்புகளில் இருந்தும் வெளிப்பட்டது பெருமிதம் தரக் கூடியதாக இருந்தது. லாக்டவுன் விலக்கப்பட்டு வரும் நிலையில் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னையில் வீடு வீடாக ஆய்வு.. 7 நாள் தனிமை முகாம்.. தலா ரூ.1000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு
மகளின் கல்விச் செலவிற்காக வைத்திருந்த ரூ 5 லட்சத்தில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகனை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் சாதனை அளப்பரியது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படாத எந்த ஒரு சமூகமே இல்லை. நாட்டின் ஏழைகள், தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஆம்பன் புயலை ஒடிஷா, மேற்கு வங்க மக்கள் தீரமுடன் எதிர்கொண்டனர். ஒடிஷா, மே.வங்க மக்களுடன் ஒட்டுமொத்த தேசமும் இணைந்து நிற்கிறது என்றும் மோடி தெரிவித்தார்.