ஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி
டெல்லி: ஆம்பன் (அம்பன், உம்பன்) புயலால் பெரும் சேதங்களை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்துக்கு ரூ1,000 கோடியும் ஒடிஷாவுக்கு ரூ500 கோடி நிதி உதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
வங்க கடலில் உருவான சூப்பர் புயல் ஆம்பன் மே 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஒடிஷாவில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் 15 லட்சம் மக்கள் முன்னேற்பாடாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டன. மேற்கு வங்கத்திலும் கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஆனாலும் ஆம்பன் புயலின் உக்கிர தாண்டவத்துக்கு மொத்தம் 70க்கும் அதிகமானோர் பலியாகினர். கொல்கத்தா பெருநகரத்தையே ஆம்பன் புயல் உருக்குலைத்துப் போட்டது. இந்த இரு மாநிலங்களின் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
ஒடிஷாவில் முதல்வர் நவீன்பட்நாயக்குடன் இணைந்து புயல் சேதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதேபோல் மேற்கு வங்கத்திலும் முதல்வர் மமதா பானர்ஜியுடன் இணைந்து பிரதமர் மோடி சேத பகுதிகளைப் பார்வையிட்டார்.
ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
இதன் பின்னர் வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், ஒடிஷா மாநிலத்துக்கு ரூ500 கோடியும் மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ1,000 கோடியும் புயல் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.