இன்று தேர்வு செய்யப்படுகிறார் புதிய சிபிஐ இயக்குனர்! பிரதமர் தலைமையில் மாலை ஆலோசனை!
சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளது.
டெல்லி: சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளது.
3 மாதங்களாக நடந்த பரபர திருப்பங்கள் இன்று இரவோடு முடிவிற்கு வர இருக்கிறது. சிபிஐ அமைப்பிற்கு இன்று புதிய இயக்குனர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மா கடந்த இரண்டு வாரம் முன் பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு மூலம் நீக்கப்பட்டார்.
சிபிஐ அமைப்பிற்குள் நிலவி வந்த பிரச்சனைகளை தொடர்ந்து, அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வெர்மா வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்று பணிக்கு திரும்பினார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு அலோக் வெர்மாவை சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் தற்போது சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும். இந்த குழுவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மல்லிகார்ஜுனா கார்கே இடம்பிடித்துள்ளனர்.
இதற்கான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. 1983, 84, 85 ஆகிய வருடங்களில் தேர்வான ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த தேர்வு பட்டியலில் பரிசீலிக்கப்பட உள்ளனர். 17 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின் அது 12 பேர் கொண்ட பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் இருந்து ஒரு நபரை தேர்வு குழு தேர்வு செய்யும். அனுபவம், வயது, முன்னுரிமை என்று பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. ஷிவானந்த் ஜா ஐபிஎஸ், ரஜினிகாந்த் மிஸ்ரா ஐபிஎஸ், ராஜேஷ் ரஞ்சன் ஐபிஎஸ், சுபோத் ஜேய்ஸ்வால் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.