பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதானமான கொள்கைகள், கனவுகளில் இரண்டான காஷ்மீர் 370வது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவற்றை ஆகஸ்ட் 5-ந் தேதிகளில் நிறைவேற்றியிருக்கிறார் பிரதமர் மோடி என மகிழ்கின்றனர் பாஜகவினர்.
Recommended Video
பாரதிய ஜனதா கட்சியின் வாக்குறுதிகளில் எப்போதும் தவறாமல் இடம்பிடித்திருந்தவை ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை ரத்து செய்வோம்; அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்; பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம் உள்ளிட்டவைதான். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் இந்த வாக்குறுதிகள் இடம்பெற்றுவிடும்.
அத்துடன் நிற்காமல் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான மக்கள் இயக்கங்களையும் பாஜக தொடர்ந்து நடத்தி வந்தது. 1990-ல் பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரதயாத்திரை நடத்தினார்.
அயோத்தியில் ராமர் கோயில்...பொன்னான நாள்...பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்!!
ராமர் கோவிலுக்கான ரத யாத்திரை
அத்வானியின் இந்த ரதயாத்திரை அன்று தேசத்தில் எழுப்பிய அதிர்வலைகள் அப்படியானது. அப்போது அத்வானியை பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் கைது செய்தார். அத்வானி கைதையும் மீறி அயோத்தி நோக்கி சென்ற லட்சக்கணக்கான கரசேவர்களை உ.பி. முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ் சிறையிலடைத்தார். அந்த கால கட்டத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை பிரதமராக இருந்த விபிசிங் அமல்படுத்த, அவரது அரசாங்கத்தையே கவிழ்த்தது பாஜக.
ரத யாத்திரை எதிரொலிகள்
அத்வானியின் ரதயாத்திரை காலத்தில் அவரது நெருங்கிய ஜூனியர் சகாக்களில் ஒருவராக இருந்தவர்தான் இன்றைய பிரதமர் மோடி. அன்று அத்வானி தொடங்கிய ரத யாத்திரை ஏற்படுத்திய விளைவுதான் 1992 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்து முஸ்லிம் கலவரம் வெடித்தது. உலகை உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
அயோத்தியில் ராமர் கோவில்
அன்று தொடங்கிய வன்ம நடவடிக்கைகள் குஜராத் இனகலவரமாக விஸ்வரூபமெடுத்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்று- அதாவது ஆகஸ்ட் 5-ந் தேதி சுமூகமாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. ஆம் பாஜகவின் மிகப் பெரிய லட்சிய கனவை நிறைவேற்றி காட்டி இருக்கிறார் பிரதமர் மோடி என்பதில் மிகை இல்லை.
ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவு
கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் 5-ந்தேதிதான் பாஜகவின் ஆகப் பெரிய இன்னொரு கனவான, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவையும் ரத்து செய்தார் பிரதமர் மோடி. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டால் ஜம்மு காஷ்மீர் கொந்தளிக்கும் என எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் துணிச்சலாக அந்த நடவடிக்கையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.
பொதுசிவில் சட்டமா?
ஆனால் போராட்டங்கள், கிளர்ச்சிகள் விஸ்வரூபம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக அத்தனை காஷ்மீர் தலைவர்களையும் சிறையில் அடைத்து பெருமளவில் ராணுவத்தினரையும் குவித்து கொந்தளிப்பை அடக்கி பாஜகவினரின் அதிஉச்ச கனவுகளில் ஒன்றை நிறைவேற்றி காட்டினார் பிரதமர் மோடி. பாஜகவின் அஜெண்டாக்களில் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்துவிட்டது. பொதுசிவில் சட்டம் அடுத்து அமலாக்கப்படலாம். அனேகம் அது அடுத்த ஆகஸ்ட் 5-ந் தேதியாகவும் இருக்கவும் கூடும்.