ட்விட்டருக்கு போட்டியாக வந்திருக்கும் டூட்டர்.. மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இல்லை.. பாஜக விளக்கம்
டெல்லி: ட்விட்டரைப் போலவே இருக்கும் டூட்டர் தளத்தில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட எந்த பாஜக தலைவர்களுக்கும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.
டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ட்விட்ட நிறுவனம் பேச்சு சுந்தரத்தை முடக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவை ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.
டூட்டரில் பாஜக தலைவர்கள்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ட்விட்டரைப் போலவே இருக்கும் டூட்டர் என்ற தளம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கின. இந்தியாவின் சுதேசி சமூக வலைத்தளம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அத்தளத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கான பக்கங்களும் உள்ளன. ட்விட்டரில் இருப்பதைப் போலவே இதிலும் இவர்களின் கணக்குகளுக்கு ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிடும் ட்வீட்கள், இதிலும் வெளியாகின்றன.
பாஜக மறுப்பு
இதையடுத்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டூட்டரில் இணைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவின, ஆனால், இதற்கு பாஜக சமூக ஊடக பிரிவின் தலைவர் அமித் மால்வியா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமித் மால்வியா தனது ட்விட்டரில், "பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட எந்த பாஜக தலைவரும் டூட்டர் தளத்தில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
டூட்டருக்கு கேள்வி
இதையடுத்து டூட்டர் நிறுவனத்திடம் பாஜக செய்தித்தொடர்பாளர் சுரேஷ் நகுவா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து சுரேஷ் நகுவார, "டூட்டரில் பாஜக தலைவர்கள் இல்லை என்பதை அமித் மால்வியா தெளிவுபடுத்திவிட்டார். இப்போது டூட்டர் சில விஷயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் யாருடைய அனுமதியுடன் பாஜக தலைவர்கள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன? அவற்றுக்கு ப்ளூ டிக் எவ்வாறு வழங்கப்பட்டன? இந்தக் கணக்குகளில் யார் பதிவிடுகிறார்கள்?" என்று அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
டூட்டர் தளம்
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டூட்டர் தளம் பார்க்க பேஸ்புக் மற்றும் ட்விட்டரின் கலவை போல உள்ளது. இந்தியாவின் சுதேசி சமூக வலைத்தளம் என்றும் அமெரிக்காவின் ட்விட்டர் நிறுவனத்திடம் இந்தியா இருப்பதும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இந்தியா இருந்ததும் வேறுவேறு இல்லை என்று டூட்டர் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எப்போது கருத்து சுந்தத்திற்கு ஆதரவாக டூட்டர் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தான் பாஜக தலைவர்கள் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.