சுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி!
டெல்லி: மறைந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டனர்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மரணச் செய்தி கேட்டு பாஜகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள், ராகுல்காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்!
துக்கம்
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். பின்னர் மகள் பன்சூரிக்கும் சுஷ்மாவின் கணவருக்கும் ஆறுதல் கூறினார் மோடி. சிறிது நேரம் அங்கிருந்த மோடிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அத்வானி
இதையடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அது போல் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சுஷ்மாவின் உடலை கண்டு அழுதார். அத்வானியின் மகள் பிரதீபா, சுஷ்மாவின் மகள் பன்சூரிக்கு கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார்.
மரணம்
முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுஷ்மா மறைவு குறித்து கூறுகையில் இந்திய அரசியலில் மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கை முழுவதையும் பொதுச் சேவைக்காகவே ஒப்படைத்த ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தால் நாடே சோகமாகியுள்ளது.
தனி முத்திரை
ஏழைகளின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் சுஷ்மா சுவராஜ். பல கோடி மக்களுக்கு ஆதர்ச சக்தியாக உதாரணமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். மிகச் சிறந்த நிர்வாகி, தான் பதவி வகித்த அமைச்சரவையில் தனி முத்திரை பதித்தவர் சுஷ்மா சுவராஜ்.
வெளிநாடு
வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனில் தனி அக்கறை காட்டினார். பலருக்கு உதவியுள்ளார். அனுதாபத்துடன் செயல்பட்டார் என்று மோடி புகழாரம் சூட்டியிருந்தார்.