7 வருடத்திற்கு முன்பே வந்த திட்டம்.. புதிது போல அறிவித்த மோடி.. மிஷன் சக்தியின் திடுக்கிடும் உண்மை!
பிரதமர் மோடி இன்று வெற்றிபெற்றதாக அறிவித்த மிஷன் சக்தி திட்டம் 7 வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடி இன்று வெற்றிபெற்றதாக அறிவித்த மிஷன் சக்தி திட்டம் 7 வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மிஷன் சக்தி திட்டம் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். விண்வெளியில் குறைந்த உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா பெற்று இருக்கிறது என்று மோடி அறிவித்தார்.
இதன் மூலம் வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும் என்று அவர் கூறினார். ஆனால் இது மிகவும் பழைய திட்டம் என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.
விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்?
வெற்றி
சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த திட்டம் 7 வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 2012ல் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையும், டிஆர்டிஓவும் ஒன்றாக சேர்ந்து இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து இருக்கிறது. 2012 ஏப்ரல் மாதம் இந்த சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஏன் அப்போது
அப்போது 2007 சீனா முதல்முறையாக தனது சொந்த செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அழித்து சாதனை படைத்தது. இதையடுத்து 2008ல் இதே ஆராய்ச்சியில் இறங்கிய இந்தியா 2014ல் அதை வெற்றிகரமாக முடித்து சோதனையும் செய்து இருக்கிறது. அப்போதைய செய்திகளிலும் இது முக்கிய செய்தியாக இடம்பிடித்து இருந்துள்ளது.
என்ன சொன்னார்
அப்போதைய டிஆர்டிஓ தலைவர் சரஸ்வத் , இது மிகப்பெரிய சாதனை. விண்வெளியில் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவின் செயலுக்கு இது தக்க பதிலடியாக இருக்கும். சீனாவை போலவே நாமும் பலம் பொருந்திய நாடு என்பதை நிரூபித்து இருக்கிறோம், என்று அப்போதே கூறி இருக்கிறார்.
மோடி இப்போது
இதைத்தான் தற்போது மோடி புதிய திட்டம் போல அறிவித்து இருக்கிறார். அப்போது இதற்கு மிஷன் சக்தி என்று பெயர் வைக்கப்படவில்லை. மோடி தற்போது பெயரை மட்டும் மாற்றி, புதிய திட்டம் போல இதை அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.