இலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி- ராஜபக்சேவிடம் மோடி உறுதி
டெல்லி: இலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியை பெற்றது. இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார்.
இலங்கை பிரதமர் ராஜபக்சே, அதிபர் கோத்தபாய ராஜபக்சே இருவரும் சீனா ஆதரவாளர்கள். இதனால் இந்தியாவுடனான ராஜபக்சே சகோதரர்களின் உறவு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இருப்பினும் இந்தியாவுடன் நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுப்போம் என இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!!
மோடி- ராஜபக்சே வீடியோ கான்ஃபரன்ஸ்
இந்நிலையில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய அழைப்பை ஏற்று இந்த வீடியோ கான்ஃபரன்ஸில் பங்கேற்றதற்காக ராஜபக்சேவுக்கு நன்றி. இலங்கையின் பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகாலமானது. அண்டை நாடுகளுடனான நட்புறவில் இலங்கைக்கு எப்போதும் என்னுடைய அரசு முன்னுரிமை தந்து வருகிறது என்றார்.
ராஜபக்சே கருத்து
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, கொரோனா காலத்தில் உலக நாடுகளில் இந்தியா இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கச்சா எண்ணெய் கப்பல் தீ பிடித்த போது இருநாடுகளும் இணைந்து செயற்பட்டது நட்புறவின் அடையாளம் என்றார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கலாசார மையம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாசார மைய கட்டுமானப் பணிகள் பற்றி ராஜபக்சே குறிப்பிட்டார். இந்த கலாசார மைய பணிகள் முழுமையடைந்துவிட்டன. இதனை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகை தர வேண்டும் என்று ராஜபக்சே கேட்டுக் கொண்டார்.
ரூ110 கோடி இலங்கைக்கு உதவி
அப்போது, இலங்கை சில பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்திருக்கிறது. இந்த தடைகள் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இலங்கையின் பொருளாதாரத்துக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் இலங்கையுடனான புத்த மத உறவுகளை மேம்படுத்துவதற்கு ரூ110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகருக்கு இலங்கையில் இருந்து இயக்கப்படும் விமானத்தில் வருகை தரும் புத்தமத யாத்ரீகர்களை வரவேற்க இந்தியா தயாராக உள்ளது என்றும் மோடி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.