பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி!!
டெல்லி: பொது இடங்களில் தனிநபர் ஆரோக்கியம்...சமூக இடைவெளி அவசியம்....பிரதமர் மோடி!!
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நகரங்களில் எடுக்க வேண்டிய அவசர கால நடவடிக்கைகள் குறித்து இன்று நடத்திய காணொளி மூலம் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்தார். தனிநபர் ஆரோக்கியம், சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நிதிஆயோக் உறுப்பினர்கள், அமைச்சரவை செயலாளர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் முக்கிய நகரங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் 8.21 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,114 பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
அப்போது, ''அதிகமாக தொற்று இருக்கும் இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். டெல்லியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாதிரியே நாட்டின் மற்ற நகரங்களிலும் எடுக்க வேண்டும். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லியில் எவ்வாறு மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனரோ அதேபோல் மற்ற மாநிலங்களிலும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்து சுத்தம் பேண வேண்டும். தனிநபர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரங்கள் செய்ய வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்
அஹமதாபாத் நகரில் தன்வந்திரி ரதம் என்ற பெயரில் கொரோனா அல்லாமல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு வீட்டுக்கே மருத்துவ வேன் சென்று சிகிச்சை அளிக்கிறது. இந்த வேனில் ஆயுஷ் மருத்துவர்கள் குழு செல்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,114 பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து பிரதமர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளார். பெரும்பாலான பாதிப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 2,38,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் 1,30,261 பேரும் டெல்லியில் 1,09,140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது போல் குஜராத்தில் 40,069 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 33,700 பேரும், கர்நாடகத்தில் 33,418 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை 5,15,385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைவோர் சதவீதமும் 62.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.