சரியான நேரத்தில் பிடனுடன் பிரதமர் மோடி பேசுவார்.. டிரம்பின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டிய இந்தியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில்வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுடன், பரஸ்பரம் வசதியான நேரத்தில் சரியான நேரத்தில் என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்திய அமெரிக்க உறவை அமெரிக்காவில் உள்ள இரண்டு கட்சிகளுமே நல்லாதரவை வழங்கி வருகின்றன என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு பதிவான வாக்குகளால் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு வாரத்தில் இப்படி ஒரு கருத்தை இந்திய வெளியறவுத்துறை வெளிப்படுத்தி உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனை ட்வீட் மூலம் வாழ்த்தியதோடு, இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த முன்னாள் துணை அதிபராக இருந்த போது பிடன் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி எதிர்பார்ப்பு
இந்தியா-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்று ஸ்ரீவஸ்தவா ஆன்லைன் ஊடக சந்திப்பில் கூறினார்.
எப்போது நடக்கும்
இரு தலைவர்களும் எப்போது ஒருவருக்கொருவர் பேசுவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்கப்பட்டதற்கு, அது "பரஸ்பரம் வசதியான நேரத்தில் சரியான நேரத்தில் நடக்கும்" என்று ஸ்ரீவஸ்தவா பதில் அளித்தார்.
இருகட்சிகளும் ஆதரவு
புதிதாக பிடன் தலைமையில் அமையப்போகும் அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுடனான உறவுகளின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு ஸ்ரீவாஸ்தவா பதில் அளிக்கையில், "இந்தியா-அமெரிக்க உறவுகளின் அடித்தளம் மிகவும் வலுவானது. இரு நாடுகளுக்கும் இடையில் சர்வதேச விவகாரங்களில் பெரிய அளவில் விளங்கும் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அமெரிக்காவில் இரு கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
பெரும் முன்னேற்றம்
அடுத்தடுத்த அதிபர்கள் மற்றும் அவர்களின் நிர்வாகங்கள் இந்திய அமெரிக்க நட்புறவை இன்னும் ஆழப்படுத்தியுள்ளன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டன, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டன.