ஏர்போர்ட்டிற்கு வண்டியை விடுங்க.. சல்மானுக்காக விதிகளை மீறிய மோடி.. சவுதி மேல் இவ்வளவு பாசமா பாஸ்?
சவுதி முடிஇளவரசர் சல்மானை வரவேற்பதற்காக பிரதமர் மோடி விதிமுறைகளை மீறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: சவுதி அரேபியாவின் முடிஇளவரசர் சல்மானை வரவேற்பதற்காக பிரதமர் மோடி விதிமுறைகளை மீறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்து இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்ற சல்மான் தற்போது இந்தியா வந்துள்ளார்.
இன்று இந்தியாவுடன் 5 முக்கிய ஒப்பந்தங்களை சல்மான் கையெழுத்திட உள்ளார். இதில் ராணுவம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரில் சென்று அழைத்தார்
ரியாத்தில் இருந்து கிளம்பி நேற்று இரவு 9.20 மணிக்கு சல்மான் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். சல்மானை பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனால் டெல்லியில் விமான போக்குவரத்து அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்திலேயே அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஏன் தவறு
நேற்று பிரதமர் மோடி இதற்காக விதிமுறைகளை மீறி இருக்கிறார். பொதுவாக இந்திய பிரதமர் ஒருவர் வெளிநாட்டு தலைவரை நேரடியாக விமான நிலையத்தில் வரவேற்க மாட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர்தான் வரவேற்பார். ஆனால் பிரதமர் மோடி, இந்த விதிகளை புறந்தள்ளிவிட்டு, சல்மானுக்காக விமான நிலையத்திற்கே வந்து இருக்கிறார்.
பெரும் சர்ச்சை
பிரதமர் மோடியின் இந்த செயல் நிறைய கேள்விகளை, சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. சல்மான் முக்கியமான தலைவர்தான் ஆனாலும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் இது தேவையா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். பிரதமர் மோடியே இது போல விதிமுறைகளை மீறுவது எப்படி சரியாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
முன்பு
இதற்கு முன்பே பிரதமர் மோடி இதேபோல் ஒருமுறை செய்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பின் இப்போது சல்மானுக்காகத்தான் மோடி இப்படி செய்துள்ளார். பிரதமர் மோடி சல்மானை அந்த அளவிற்கு மதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.