இதான் மோடி கெத்து.. தடை விதிச்ச நாட்டின் அதிபரையே குஜராத்துக்கு வர வச்சிட்டாரே!
அன்று முதல்வர் மோடிக்கு அமெரிக்கா வர தடை விதித்தது
டெல்லி: உண்மையிலேயே பிரதமர் மோடி கெத்தானவர்தான்... ஏன்னா, தன்னை உள்ளேயே வரக் கூடாதுன்னு தடை விதிச்ச நாட்டின் அதிபரையே தனது மாநிலத்துக்கு வர வைச்சு பேச வச்ச அந்த தில்லு இருக்கே.. உண்மையிலேயே மோடி வரலாறு படைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
Recommended Video
அமெரிக்காவுக்கென்று ஒரு வரலாறு உண்டு... அதாவது தடை விதிப்பதில் தனக்கென தனி வரலாறு படைத்த நாடு அமெரிக்கா... பிற நாடுகளில் கூட இப்படியெல்லாம் பெரிதாக இருக்காது. ஆனால் அமெரிக்காவில் இதற்கும் கூட ஒரு வரலாறு உண்டு.
தென் ஆப்பிரிக்க சிங்கம் நெல்சன் மண்டேலா, அர்ஜென்டினாவின் கால்பந்துப் புலி மாரடோனா முதல் பலரை தங்களது நாட்டுக்குள் வரக் கூடாது என்று தடை விதித்த நாடுதான் அமெரிக்கா. காலப் போக்கில் இவையெல்லாம் நீக்கப்பட்டன என்றாலும் கூட இந்தத் தடையால் உலக நாடுகளை பரபரப்புக்குள்ளாக்கிய வரலாறு கொண்டது அமெரிக்கா.
குஜராத் முதல்வர்
அப்படித்தான் நமது பிரதமர் நரேந்திர மோடியையும், அவர் முதல்வராக இருந்தபோது தடை விதித்து பரபரப்பை கிளப்பியது. அப்போது காங்கிரஸ் ஆட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மன்மோகன் சிங் தான் பிரதமராக இருந்தார். குஜராத் முதல்வராக இருந்தார் நரேந்திர மோடி. அது ஆண்டு 2005!! அவர் அப்போது அமெரிக்கா செல்ல விரும்பியபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. அவர் ஏ2 விசா கோரியிருந்தார். ஆனால் அது தரப்படவில்லை. அதை விட மோசமாக ஏற்கனவே கொடுத்த பி1 விசாவையும் ரத்து செய்தது அமெரிக்கா.
கொந்தளித்தது
இதனால் பாஜக கொந்தளித்தது... நாடாளுமன்றத்தில் அமளி துமளியானது... இதுகுறித்து அமெரிக்கா பின்னர் விளக்கம் அளித்தது. அதாவது குஜராத்தில் மத சுதந்திரம் இல்லை. இதன் காரணமாகவே குஜராத் முதல்வர் மோடிக்கு விசா மறுக்கப்படுகிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய சாதாரண விஷயம்தான் என்று விளக்கம் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் காங்கிரஸின் சதியால்தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது.
குஜராத் கலவரம்
என்ன விஷயம் என்றால், இப்படி அமெரிக்காவுக்குள் வரக் கூடாது என்று தடை செய்யப்பட்ட ஒரே இந்தியத் தலைவர் மோடிதான். அந்த வகையில் மோடிக்கு இந்திய அளவில் பரிதாப அலையும் ஏற்பட அந்த தடை உதவியது. அந்தத் தடையை வைத்தே தேசிய அளவில் ஹீரோவும் ஆனார் மோடி. இந்த நிலையில் மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் தொடர்பில்லை, அவரை தண்டிக்க போதிய ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு 2012ல் அறிக்கை அளித்தது.
மிகப்பெரிய வெற்றி
2014ல் பிரதமராகிறார் மோடி... அதன் பிறகுதான் அவருக்கு அமெரிக்கா செல்வதற்கான தடை நீங்கியது. அமெரிக்காவும் சென்று வந்தார். அதை விட முக்கியமாக 2016ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்தவும் அழைத்து கெளரவித்தது அமெரிக்க அரசு. அதேபோல அமெரிக்கா அதிபராக இருந்த பராக் ஒபாமா 2 முறை இந்தியாவுக்கு வந்தார். இது மோடிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. காரணம், எந்த அமெரிக்க அதிபரும் இதுபோல இந்தியாவுக்கு 2 முறை வந்ததில்லை.
குஜராத்தில் அதிபர்
இதையெல்லாம் விட இப்போது டிரம்ப்பை குஜராத்துக்கு அழைத்து வந்து விட்டார் மோடி.. இதுதான் உண்மையான கெத்து. தான் முதல்வராக இருந்தபோது, எந்த அமெரிக்கா தனக்கு தடை விதித்ததோ அதே அமெரிக்காவின் அதிபரை அதே மாநிலத்துக்கு வர வைத்து லட்சக்கணக்கானோர் முன்னிலையில் நிறுத்தி தனது மாஸை காட்டி விட்டார் பிரதமர் மோடி.. அந்த வகையில் மோடி கெத்துதான் என்ற உற்சாகத்தில் பாஜகவினர் ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளனர்.