Surgical Strike 2: எதிர்க்கட்சிகள் கண்டனம் எதிரொலி.. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி
அனைத்து கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று கூட்ட இருக்கிறார்.
டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இதுவரை மத்திய அரசு கூட்டாதது ஏன் என்று நேற்று 21 கட்சிகள் கூடி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நமது வீரரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது. அவரை பத்திரமாக மீட்க வேண்டிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. ஆனால் நிலைமை சரியானால்தான் அவரை விடுவிப்போம் என்று பாகிஸ்தான் கூறி விட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை டெல்லியில் கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் நிலவரம் குறித்து விவாதித்தனர். பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது, அரசு இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன என்று கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்குவதாகவும், அதை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்திருந்தனர். (எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை எடியூரப்பா தனது பேச்சின் மூலம் உடனேயே நிரூபித்து விட்டார்)
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவசர அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது வீட்டில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாகிஸ்தானுடனான மோதல் சூழல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.