கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சீக்கிரம் சென்று சேர வேண்டும்.. மோடி உத்தரவு
டெல்லி: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலவரம் குறித்து, இன்று பிரதமர் மோடி, உயர்மட்டக் குழு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, கொரோனா தடுப்பூசி பணிகளை துதரிதப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
அனைத்து மக்களுக்கும், கொரோனா தடுப்பூசி கொண்டு சென்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எப்படி என்பது குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,295 கொரோனா கேஸ்கள்
தேர்தல் போல
தேர்தல் காலத்தில் எப்படி அரசு இயந்திரம் முழுக்க பயன்படுத்தப்படுகிறதோ, அப்படி, தடுப்பூசி அனைவருக்கும் சென்று சேரவும், வினியோகிக்கவும், அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
உயர்மட்ட ஆலோசனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தடுப்பூசியை அனைவருக்கும் வினியோகிப்பது எப்படி என்பது பற்றி இக்கூட்டத்தில் அதிகம் ஆலோசிக்கப்பட்டது.
மூன்று தடுப்பூசிகள்
கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் முக்கிய கட்டங்களில் உள்ளன, அவற்றில் இரண்டு இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்ட சோதனைகளிலும் உள்ளன. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி திறன்களை பலப்படுத்துகின்றன, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரம்
தடுப்பூசி போக்குவரத்து, சேமிப்பு வசதிகள், தடுப்பூசி செலுத்த தேவைப்படும் சிரஞ்ச் போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பாக, அனைத்துக்குமான ஏற்பாடுகளை தீவிரகதியில் முன்னெடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.