ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனியில் பிரதமர் மோடி! ஜூன் 28-ல் அரபு எமிரேட் செல்கிறார்!
டெல்லி: ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜெர்மன் சென்றார். ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜி 7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 7 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்க்லாஸ் எல்மாவோ நகரில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். தென்னாப்ப்பிரிக்கா, இந்தோனேசியா, அர்ஜெண்டினா உள்ளிட நாடுகளின் தலைவர்களுக்கும் ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
ரூ.23 கோடி! பெங்களூரில் பிரதமர் மோடிக்காக பளபளத்த ரோடு! 2 நாளில் பள்ளமாகி பல் இழிக்கிறது!
ஜெர்மனியில் மோடி
ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்று அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜி 7 உச்சி மாநாட்டின் 2 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். முனிச் நகரில் இந்தியர்களுடனான நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மோடி அறிக்கை
ஜெர்மன் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.
தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
மனிதகுலத்தை பாதிக்கும் முக்கியமான சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, ஜி7 நாடுகள், ஜி7 பங்குதாரர் நாடுகள் மற்றும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் சர்வதேச அமைப்புகளுடன், சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப்பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து நான் கருத்துப் பரிமாறவுள்ளேன். உச்சிமாநாட்டின் இடையே ஜி7 மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
அரபு எமிரேட்ஸ் பயணம்
ஜெர்மனியில் தங்கியிருக்கும் போது, ஐரோப்பிய நாடுகளுடனான நமது நட்புறவை செழித்தோங்கச் செய்வதிலும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அளப்பரிய பங்காற்றிவரும், ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்க விருக்கிறேன். இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28,2022 அன்று அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.