சீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
டெல்லி: மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னரே அவரது பயணத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பதவியேற்புக்கு பின் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
வரும் 30ந் தேதி பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார். இதைத்தொடர்ந்து, ஜூன் 6ல் 17-வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் புதிய எம்.பி.,க்கள் பங்கேற்கும் முதல் கூட்டத் தொடர் துவங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வரும் ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் அவர் மாலத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
கடந்த ஆண்டு மாலத்தீவில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டது. மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். யாமீனின் நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கவும் கோரிக்கை வைத்தது. இந்தியாவின் கோரிக்கைக்கு யாமீன் செவி மடுக்கவில்லை.
இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வியுற்றார். இப்ராஹீம் சோலி புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டார்.
மாலத்தீவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, மாலத்தீவுடனான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, பிரதமராக பதவி ஏற்ற உடனே, முதல் நாடாக மாலத்தீவு செல்ல மோடி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு ஊடங்கங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.