உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல... தோல்வியும் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. மேலும் அயோத்தியில் சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு.
இத்தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல. சமநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. அது ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தி என இருந்தாலும் தேச பக்தி உணர்வை நாம் வலிமைப்படுத்துவோம். சட்டத்தின் நடைமுறையின்படி எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, தொலைநோக்கு ஆகியவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது.
நீண்டகால விவகாரத்துக்கு நீதித்துறை சுமூகமான முறையில் தீர்வை கொடுத்துள்ளது. அனைத்து தரப்புக்கும் போதுமான அவகாசம் வழங்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தேசத்தின் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் அமைதியும் சமாதானமும் இணைந்த வாழ்க்கை மீதான உறுதியை வெளிப்படுத்துகிறது. இது நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை வழங்கட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.