பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
டெல்லி: பெண்கள் சக்தியை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஜெயலலிதா மேற்கொண்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயலிதாவுடனான பல சந்திப்புகளை எப்போதும் போற்றுவேன் என்று பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுவும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெண்கள் சக்தியை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஜெயலலிதா மேற்கொண்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன்.
ஜெயலலிதா பெண்கள் அதிகார முன்னேறுத்துக்காக மிகவும் பாடுபட்டார். மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றால் பரவலாகப் போற்றப்படுகிறார். அவருடனான பல சந்திப்புகளை எப்போதும் போற்றுவேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.