தேச வளர்ச்சிக்கு மத்திய-மாநில ஒத்துழைப்பு மிக முக்கியம்...நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு!
டெல்லி: ஒருங்கிணைந்த செயல்பாடுதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடிப்படையாகும். மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
தேசத்தின் மனநிலையை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாட்டின் முதுகெலும்பாக இளைஞர்கள் திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
யூனியன் பிரதேசங்காள பிரிக்கப்பட்ட லடாக், ஜம்மு-காஷ்மீர் முதன் முதலாக இன்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டன.
நிதி ஆயோக் கூட்டம்
இந்தியாவில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது.அதற்கு பதிலாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்ட்டது.
லடாக் யூனியன் பிரதேசம் முதன்முதலாக பங்கேற்பு
இந்த நிலையில் 6-வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் காணொளி காட்சி மூலமாக நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் கலந்து கொண்டனர். யூனியன் பிரதேசங்காள பிரிக்கப்பட்ட லடாக், ஜம்மு-காஷ்மீர் முதன் முதலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.
தனியார் நிறுவனம் பெரும் பங்களிப்பு
வேளாண்மை, உள்கட்டமைப்பு, பொருள் உற்பத்தி, மனிதவள மேம்பாடு, அடிமட்ட அளவில் சேவை வழங்கல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை தொடர்பான விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்டுகின்றன. நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடுதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடிப்படையாகும்.
இருதரப்பு ஒத்துழைப்பு அவசியம்
கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசும், மாநிலங்களும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டன என்பதை பார்த்தோம். இதனால் தேசம் வெற்றி பெற்றது. இந்தியாவின் ஒரு நல்ல பிம்பம் முழு உலகத்திற்கும் முன்பாக காட்டப்பட்டது. எனவே மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.கடந்த சில ஆண்டுகளில் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்குவது, தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகள் அதிகரிப்பு, இலவச மின்சார இணைப்பு, ஏழைகளை மேம்படுத்துவதற்கான இலவச எரிவாயு இணைப்பு என மக்களின் வாழ்க்கையில் ஒரு அற்புதமான மாற்றத்தை பிரதிபலித்திருப்பதை நாம் கண்டோம்.
இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு(பட்ஜெட்) கிடைத்த நேர்மறையான பதில் தேசத்தின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தேசம் நேரத்தை இழக்காமல் வேகமாக முன்னேற விரும்புகிறது. தேசத்தின் மனநிலையை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாட்டின் முதுகெலும்பாக இளைஞர்கள் திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்,, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசின் பிற மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.