15ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி.. மாநில முதல்வர்களுக்கு அழைப்பு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு அனைத்து மாநில முதல்வரகள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பொருளாதரா சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை அவர்களுக்கு வழங்குதல், அதற்காக பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசு நிலங்களை அடையாளம் காணுதல்,
அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனங்களை தனியார்மயப்படுத்துதல், வங்கி சீர்திருத்த நடவடிக்கைகள், வரி வசூலித்தலில் சிறந்த நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வரும் 100 நாட்களுக்குள் செய்யப்பட இருப்பதாக நிதி ஆயோக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மட்டுமல்லாது நீர் நிர்வாகம், விவசாயம், மாவட்ட வாரியான வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற முக்கிய பிரச்னைகள் பற்றி நிதி ஆயோக்கின் முதல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதல் நிதி ஆயோக் கூட்டம்
நாட்டின் பாதுகாப்பு விவகாரமும் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்து வரும் நக்சலைட் தீவிரவாதம் குறித்தும் நிதி ஆயோக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி கூட்டப்படவுள்ளது.
ஆளுநர்களுக்கு அழைப்பு
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. அதோடு மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
புதிய அமைப்பு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் மத்திய திட்ட கமிஷன் என்று இருந்த அமைப்பை கடந்த 2014 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி கலைத்தார். அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் அமைப்பில் அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய உயரதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
4 முறை நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் 2015 பிப்ரவரி 8 அன்று நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் நடந்தது. அதன் பின் 2015 ஜூலை 15, 2017 ஏப்ரல் 23, 2018 ஜூன் 17 ஆகிய தினங்களில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 4 முறை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இப்போது அமைந்துள்ள புதிய ஆட்சியில் முதன் முறையாக ஜூன் 15 ஆம் தேதி நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது.