மெரீஷியஸ் சுப்ரீம் கோர்ட்.. இந்தியா கட்டிக் கொடுத்த சூப்பர் பில்டிங்.. திறந்து வைத்தார் மோடி.. !
டெல்லி: இந்தியா நிதியுதவியுடன் மொரீசியஸ் நாட்டில் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட உச்ச நீதிமன்றத்தை அந்த நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மொரீசியஸ் நாட்டின் நீதிமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறுகையில், ''கொரோனா வைரஸை மொரீசியஸ் நாடு திறமையான முறையில் எதிர்கொண்டு வருகிறது. மருந்து மற்றும் கொரோனா குறித்த தகவல்களை மொரீசியஸ் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். போர்ட் லூயிஸில் கட்டப்பட்டு இருக்கும் புதிய உச்ச நீதிமன்றம் இருநாடுகளின் ஒத்துழைப்புகளுக்கும், மதிப்புகளுக்கும் அடையாளமாக நிற்கிறது.
அபிவிருத்தி கூட்டாளிகளாக நாடுகள் இருக்க வேண்டும் என்று வரலாறு நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. இதுதான் காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், உலக அரங்கில் தன்னிச்சையாக கோலோச்ச நினைப்பவர்களுக்கும் தடையாக இருக்கிறது.
எதிர்கால வளர்ச்சி, நிலையான வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை இணைந்து இருக்கும் நாடுகளுடன் நட்புணர்வு கொண்டுள்ளோம். வர்த்தகத்தில் இருந்து பண்பாடு, எரிபொருளில் இருந்து பொறியியல், சுகாதாரத்தில் இருந்து ஹவுசிங், ஐடியில் இருந்து கட்டமைப்பு, விளையாட்டில் இருந்து அறிவியல் என்று உலகின் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
மொரீசியஸ் நாட்டுக்கு இன்று மட்டும் நாங்கள் உதவி செய்யவில்லை. எதிர்கால சந்ததிகள் பயன்படும் வகையில் உதவுவதற்கு நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஆதலால்தான் திறன்களை வளர்த்தல், பயிற்சி அளித்தால் முக்கிய இடம் பெறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றம் அமைவதற்கு இந்தியா உதவி செய்தது என்றால், நைஜரில் மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தை அமைக்க உதவி வருகிறோம்'' என்றார்.
மொரீசியஸ் பிரதமர் பேசுகையில், ''தற்போது எங்கள் முன்பு நிற்கும் கம்பீர கட்டிடம் இந்தியா, மொரீசியஸ் உறவுக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. எதிர்காலத்தில் இன்னும் எங்களது உறவுகள் வலுப்படும். எங்களது இருநாடுகளின் உறவுகள் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க வேண்டும். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மொரீசியஸ் அவரது இருதயத்துக்கு நெருக்கமானதாக இருந்து வருகிறது. எங்களது ஒற்றுமையை பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் தெரிவிக்கிறேன்'' என்றார்.
#WATCH Live - Prime Minister Narendra Modi and Mauritian PM Pravind Jugnauth jointly inaugurate the new Supreme Court building of Mauritius through video conferencing. https://t.co/8JY0j2iK7c
— ANI (@ANI) July 30, 2020
கடந்த 2016ஆம் ஆண்டில் மொரீசியஸ் நாட்டுக்கு இந்தியா 353 மில்லியன் டாலர் அளவிலான சிறப்பு பொருளாதார நிதியுதவியை அளித்து இருந்தது. பத்து மாடி கட்டிடம் 25,000 சதுர கி. மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.