பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை ஆலோசனை... லாக்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய முடிவு
டெல்லி: பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் நாளை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநிலங்களில் இருந்தும் முதலமைச்சர்கள் வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல் குரல் எழுப்பியவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். ஆனால் அவருக்கும் ஒரு படி மேலே சென்று ஏப்ரல் 30 வரை ஒடிசாவில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். இதை வைத்து பார்க்கும் போது பெரும்பாலானா மாநில அரசுகளின் கோரிக்கையாக இருப்பது மத்திய அரசு ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தான்.
இதனிடையே கடந்த 8-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு உயிரும் தமது அரசுக்கு முக்கியம் என்றும், ஒவ்வொரு உயிரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் முழுமுதற் பணியாக உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரேநேரத்தில் ஊரடங்கை முடித்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை என சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறும் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு லாக்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய அறிவிப்பு பிரதமரிடம் இருந்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.