ப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி
நாமக்கல் மாணவி கனிகா உடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் லைவ் ஆக பேசிய மோடி, வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவிக்கும் அவரது தந்தைக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்களை கூறினார்.
டெல்லி: நாமக்கல் என்றாலே ஆஞ்சநேயர்தான் நினைவுக்கு வருவார் என்று மாணவி கனிகாவிடம் பேசும் போது பிரதமர் மோடி கூறியுள்ளார். டாக்டராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த மாணவிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் மோடி.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ரேடியோவில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பற்றியும் கார்க்கில் வெற்றி தினம் பற்றியும் பேசினார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளிடம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிகாவிடம் பேசினார். மாணவி கனிகா, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றிருக்கிறார். கனிகா ஜி வணக்கம் என்று தமிழில் பேச ஆரம்பித்தார். சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் என்றாலே ஆஞ்சநேயர் கோவில்தான் நினைவுக்கு வரும். உன்னோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இனி இந்த நினைவும் வரும் என்று சொன்ன மோடி, மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு தேர்வுக்கு நன்றாக தயார் செய்திருக்கிறாய். இந்த மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தாயா என்று மோடி கேட்டார்.
அதற்கு மாணவி கனிகா மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பேசினார். இந்த மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்வுக்காக நன்றாக படித்தேன் நன்றாகவே எழுதினேன். 485 அல்லது 486 வரும் என்று எதிர்பார்த்தேன். இப்போது 490 வந்திருக்கிறது என்று கூறினார்.
உங்க குடும்பத்தினர் எப்படி இதை உணர்கிறார்கள் என்று மோடி கேட்க, அதற்கு கனிகாவோ, ரொம்ப பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது சார் என்று சொன்னார். மேலே என்ன படிக்க விரும்புகிறார் என்று மோடி கேட்கவே, நான் டாக்டராக விரும்புகிறேன் என்று மகிழ்ச்சியோடு எதிர்கால திட்டத்தை பகிர்ந்து கொண்டார் கனிகா.
இந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி
உங்க குடும்பத்தில் யாராவது மருத்துவ துறையில் இருக்கிறார்களா? என்று மோடி கேட்டதற்கு என்னோட அப்பா டிரைவர், என்னோட அக்கா இப்போ எம்பிபிஎஸ் படிக்கிறார் என்று சொன்னார் கனிகா, அதைக்கேட்ட மோடி.... ஓ... உன்னோட அப்பாவிற்கு வனக்கம். உன்னையும் உன் சகோதரியையும் நன்றாகவே கவனித்துக்கொள்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார். அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார் என்றும் சொன்னார் மோடி.
உன்னோட அப்பாவிற்கும், உனக்கும், உன் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் என்று சொல்லி மீண்டும் வாழ்த்தினார் மோடி. மகிழ்ச்சியோடு நன்றி சொன்னார் கனிகா.