தனியார் துறை பங்களிப்பு மிக முக்கியம்.. கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துங்கள்.. மோடி பேச்சு
டெல்லி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. மேலும், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய தேவையின்றி... வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்
இருப்பினும், பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு
மாபெரும் சாதனை
அப்போது ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, மிகக் குறுகிய நேரத்தில் தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் என்றார். மேலும், உலகிலேயே இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தான் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
மத்திய அரசு
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், "மிஷன் கோவிட் சூரக்ஷாவின் திட்டத்தின் கீழ் பொது-தனியார் கூட்டணி மூலம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தடுப்பூசிக்கான மிகச் சிறந்த மேம்பாட்டுச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மருந்து நிறுவனங்கள் தேவையான அனைத்து உதவிகளைப் பெறுவதை மட்டுமல்லாமல், அவர்களின் தடுப்பூசிக்கு விரைவாக அதேநேரம் அறிவியல் பூர்வமாக ஒப்புதல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.
தனியார் துறையினர் பங்கு
மேலும், தற்போது சோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவாக ஒப்புதலைத் தரத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் தனியார் துறையின் சுகாதார உள்கட்டமைப்பு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறை பங்கு மேலும் முக்கியமானதாக மாறும். எனவே மருத்துவமனைகள் மற்றும் மருந்து உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படும்" என்று அவர் பேசினார்.
மருந்து நிறுவனங்கள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, தற்போது பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகள், புதிய வகை கொரோனா வைரஸ் ஆகியவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அதிகளவிலான மக்களுக்குத் தடுப்பூசியை வழங்கும் விதமாக 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு மருந்து நிறுவனங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.