விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்: பிரதமர் மோடி
டெல்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:
2014-ம் ஆண்டு முதலே விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்றதாக பயிர் காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட்டது.
பிரதமர் கிசான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சிறு குறு விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் உலகம்- தற்சார்பு பொருளாதார பாதையில் தேசம்.. பிரதமர் மோடி
விவசாய சங்க தலைவர்களுடன் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார். இந்த சபையின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு போராடும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
அனைவரும் இணைந்து கூட்டாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். மண்டிகள் முறை தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.