நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு… பிரதமர் மோடி கடும் கண்டனம்
டெல்லி: நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் 4 தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவிரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தீவிரவாதத்தை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாராக இருந்தாலும் தீவிரவாதத்தை ஆதரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ள பிரதமர் மோடி, வெறுப்பு மற்றும் வன்முறையால் பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் ஜனநாயக சமுதாயத்தில் அதற்கு இடமில்லை என்று கூறியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.