கொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23-ல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,149. இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 86,774 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 10,10,975 ஆகவும் உள்ளது.
மகாராஷ்டிராவில் மிக மோசம்
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 11,88,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 32,216 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,57,933.
ஆந்திரா, தமிழக பாதிப்பு
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,17,776; தமிழகம் 5,36,477. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,751. ஆந்திராவில் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 5,302.
பிரதமரின் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன் தளர்வுகள் ஆகியவை தொடர்பாக ஆக.11-ந் தேதியன்று கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஆந்திரா, கர்நாடகா,தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலுங்கானா மற்றும் உ.பி. மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
செப்.23-ல் மீண்டும் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து வரும் 23-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் டெல்லி, ம.பி. ஆந்திரா, உத்தரப்பிர்தேசம், பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.