முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: காஷ்மீரில் 4 இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மாலையில் முப்படைத் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்ததை அடுத்து, பதிலடி தரும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியது.
அதன்படி நேற்று விடிகாலை விமானபடை தாக்குதல்களை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை நொறுக்கி எடுத்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற தகவலும் வெளியானது.
பாதுகாப்பு நடவடிக்கை
இதனால் திரும்பவும் இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தான் அடுத்த நடவடிக்கையில் எப்போது வேண்டுமானாலும் இறங்கும், இந்த விஷயத்தை சும்மாவிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக கையில் எடுத்தது.
எல்லையில் பதற்றம்
அதன்படியே பாகிஸ்தானின் 2 விமானங்கள், காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்து, குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவ தொடங்கி உள்ளது.
விமானங்கள்
இதையடுத்து, விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், உடனடியாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமிர்தரசிலும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அஜித் தோவல்
இதனால் நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை அனைத்தையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.
விளக்கனார்
இந்த அவசர ஆலோசனையில் ரா அமைப்பும் பங்கேற்றது. கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கினார். பிறகு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் முப்படைத் தளபதிகளுடனும் இன்று மாலை முக்கிய ஆலோசனையை நடத்தினார் பிரதமர்.