இல்லை.. இல்லவே இல்லை.. மோடி உதவி கேட்கவில்லை.. டிரம்ப் சொல்வது தவறு.. மத்திய அரசு பரபர விளக்கம்
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது.
இதில் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மோடி என்னிடம் உதவி கேட்டார்.. கொளுத்திப்போட்ட டிரம்ப்.. இம்ரான் கானுடன் நடந்த சந்திப்பில் பரபரப்பு!
உதவ வேண்டும்
காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்று கூறினார். நான் கண்டிப்பாக உதவ தயார், என்று டிரம்ப் நேற்று பேசினார். டிரம்ப்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி இருந்தது
காஷ்மீர் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தானின் தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்ப்போம், வேறு நாட்டை இதில் ஈடுபடுத்த மாட்டோம் என்பதே மத்திய அரசின் கொள்கையாக இருந்தது. காங்கிரஸ் தொடங்கி பாஜக வரை இதுவே மத்திய அரசின் கொள்கையாக இருந்தது. ஆனால் தற்போது மோடி அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டதாக வெளியான செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன விளக்கம்
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், மோடி குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்து உண்மை கிடையாது. பிரதமர் மோடி டிரம்ப்பிடம் எந்த விதமான உதவியும் கேட்கவில்லை. நாங்கள் அமெரிக்க அரசின் உதவியை எப்போதும் கேட்கவில்லை.
மாற்றம் இல்லை
பாகிஸ்தான் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் இரண்டையும் பாகிஸ்தான் மதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்வோம். அதிலும் பாகிஸ்தானுடன் இந்தியா தனியாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும். இதில் அமெரிக்காவின் உதவியை இதுவரை கேட்கவில்லை.. இனியும் கேட்க மாட்டோம் என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.