அனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்
டெல்லி: பாகிஸ்தான் அனுமதி கொடுத்த நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் அந்த நாட்டு வான் எல்லை வழியாக பயணிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் நாட்டிலுள்ள, பிஷ்கேக் என்ற நகரில் ஜூன் 13-14ம் தேதிகளில், ஷாங்காய் ஒருங்கிணைப்பு அமைப்பு (SEO), உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கிர்கிஸ்தான் நாட்டுக்கு, பாகிஸ்தான் வான் எல்லையை தாண்டி, இந்தியாவிலிருந்து பயணிப்பது சுலபமான வழியாகும். இதையடுத்து, பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்ல, பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு முதல்கட்டமாக பாகிஸ்தானும் ஒப்புதல் வழங்கியது.
ஆனால், இன்று, திடீரென இந்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்தாமல், ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் வான் எல்லை வழியாக, கிர்கிஸ்தான் செல்ல பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிப்பதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறு நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்தன. அவை விரட்டியடிக்கப்பட்டன. இந்தநிலையில், பிரதமர் மோடி, தனது பயணத்திற்கு, பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்துவது, தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்ற கருத்து எழுந்ததால், பிரதமர் அலுவலகம் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.