விவசாய மசோதா வரலாற்று சம்பவம்.. விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து விட்டது.. பிரதமர் மோடி
டெல்லி: விவசாய சீர்திருத்தம் தொடர்பான மூன்று மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மசோதா விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்க உதவும் என்றார்
விவசாயிகள் சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 மசோதா லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது.
விவசாயமும் சந்தையும் மாநிலங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மாநில அரசுகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த மசோதக்களை நிறைவேற்றியதற்கு பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு.. பாஜக கூட்டணியில் பிளவா? விரைவில் முடிவு எடுக்கிறது ஷிரோமணி அகாலி தளம்
கார்பரேட்டுகள் நுழைவார்கள்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான ஷிரோண்மணி அகாலிதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பாஜக கூட்டணி முறையும் நிலையில் இருக்கிறது. எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்பரேட்டுகள் விவசாய சந்தைக்குள் நுழைய வழிவகுக்கும் என்ற விவசாயிகளின் அச்சப்படுவதாக கூறி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது.
விவசாயிகள் போராடுகிறார்கள்
இந்த மசோதாவை நிறைவேற்றியதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பது குறித்து பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த மசோதாவுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். விவசாயிகளின் அச்சங்களுக்கு தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்றார்.
மாநில சட்டங்களை பாதிக்காது
முன்னதாக இந்த மசோதாக்களை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கும் முன்பு பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றத்தால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும்.
பெரிய நிறுவனங்கள் வரும்
சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது. இதுபோல் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. இந்த மசோதா மூலம் விவசாயத்துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும். இதனால் விவசயாத்துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகள் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கிடைக்கும்" என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து
விவாதத்திற்கு பிறகு இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றார். இந்நிலையில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து இன்று பேசிய பிரதமர் மோடி, தேர்தலின் போது இந்த மசோதவை ஏற்க உறுதியளித்த அதே கட்சிகள் இப்போது இந்த பண்ணை மசோதாக்களை எதிர்க்கின்றன, ஏனெனில் நாங்கள் இதை செயல்படுத்துகிறோம்.
முன்பு ஆதரவு
முன்னதாக அவர்கள் மாற்று விருப்பத்தை வழங்குவதற்காக ஏபிஎம்சி ஏற்பாட்டை திருத்துவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தனர், இப்போது அவர்கள் அதே திருத்தங்களையும் விதிகளையும் எதிர்க்கின்றனர். அவர்கள் விவசாயிகளுக்கு உதவ விரும்பவில்லை, மாறாக அவர்கள் இடைத்தரகர்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.
எங்கும் விற்கலாம்
காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) பற்றி பேசுகின்றன, அவை தங்கள் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் நிறைவேற்றவில்லை பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட இந்த கட்சியினர் குறித்து விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இப்போது விவசாயிகளை தங்கள் வார்த்தைகளாலும் சதித்திட்டங்களாலும் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இது எங்கள் விவசாயிகளை திண்ணைகளிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கை. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க அனுமதிக்க வேண்டும். இதுதான் இப்போது நாட்டுக்குத் தேவை.
வதந்தி பரப்புகிறார்கள்
இந்த வாக்குறுதியை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். எதிர்க்கட்சிகள் எம்.எஸ்.பி விதியின் கீழ் கோதுமை, அரிசி மற்றும் பிற பொருட்களை வாங்கப்போவதில்லை என்ற வதந்திகளை மட்டுமே பரப்புகிறார்கள். இது அவர்கள் பரப்பும் மற்றொரு பொய்.
விவசாயிகளுக்கு சுதந்திரம்
விவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பெறுவார்கள். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு நான் வாழ்த்துகிறேன். இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்க இவற்றைக் கொண்டுவருவது அவசியம். இவை விவசாயிகளின் கேடயங்கள்" இவ்வாறு கூறினார்.