தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
டெல்லி: தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை ஒட்டி உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை தமிழர்களுக்கு நேற்று முதல் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பேசியதுடன் பண்டிகையின் சிறப்பையும் எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் பண்டிகையின் பெருமிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள அவர்,
''தமிழ் சகோதர சகோதரிக்கு இனிய பொங்கல் பொங்கல் வாழ்த்துகள்.
தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது.
நல்ல உடல்நலமும் வெற்றிகளும் பெறுவோமாக.
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்த பண்டிகை நம்மை தூண்டட்டும்''
இவ்வாறு பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் தனது பொங்கல் திருநாள் வாழ்த்தை பதிவு செய்திருக்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பொங்கல் திருநாளான இன்று தமிழகத்திற்கே நேரடியாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.