திருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்
டெல்லி: பிரதமர் மோடி தனது 'மன் கி பாத்' உரையில் திருவண்ணாமலை மக்கள் குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவம், தேசிய அறிவியல் தினம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இதுகுறித்து அவர், "நமது அறிவும் தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால், எதையும் கண்டு பயம் கொள்ள வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புதிய மாற்றத்தை உணருகிறேன். இன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. ' ராமன் விளைவை' கண்டுபிடித்த நமது விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது இளைஞர்கள் படிப்பதுடன், இந்திய அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தன்னிறைவு இந்தியா திட்டத்தில் அறிவியலின் பங்களிப்பு மிகப்பெரியது" என்றார்.
மேலும், உலகின் தொன்மையான மொழியான தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் கற்க வேண்டும் என நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. சரியாக தமிழை கற்க முடியவில்லை. இலக்கிய தொன்மை வாய்ந்த மொழி தமிழ். அதனால் தான் கடுமையாக உள்ளது" என்று கூறினார்.
தொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "கோடை காலத்திற்காக நாம் மழைநீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். இயற்கை அளிக்கும் கொடையான தண்ணீரை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. நீரானது நமக்கு இயற்கை அளித்த பரிசு. இதுபோன்று, நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்" என்றார்.
மேலும், வாழை கழிவிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் மதுரை முருகேசனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.