விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ. 100 நாணயம்... பிரதமர் மோடி வெளியிட்டார்!!
டெல்லி: மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 100 ரூபாய் நாணயத்தை, இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
பாஜக கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் முக்கியமானவர் ராஜமாதா விஜயராஜே சிந்தியா. 1919ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் தேதி பிறந்தார். 2001ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நினைவாக 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு முன்னதாக இதுகுறித்து தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு இருந்தனர். விஜயராஜே சிந்தியாவின் மகள்தான் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா. விஜயராஜே சிந்தியா பேரன்தான் ஜோதிர்ராதித்ய சிந்தியா. சமீபத்தில் இவர் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்து இருந்தார். இதையடுத்து அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, ஆட்சியை பாஜக பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.