நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி : ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்டோர் சுதந்திரத்திற்காக போராடியதை நினைவுக்கூர்ந்து பேசினார் பிரதமர் மோடி.
Recommended Video
நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாத்துடனும், கோலாகலத்துடனும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மூவர்ண அலங்காரங்கள், விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன. வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது.
உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. சுதந்திரத்திற்காக நாம் கொடுத்த தியாகங்கள் மிகப் பெரியது. சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. பழங்குடியினத்தவர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டுள்ளனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது என்றார் பிரதமர் மோடி.
உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான். உலகிற்கு ஜனநாயகத்தை சொல்லி கொடுத்தது இந்தியாதான். சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் ஆட்சி ஆட்டம் கண்டது. பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. போராட்டத்தில் பங்கெடுத்து வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்டவர்களை போற்றுவோம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. பஞ்சம், போர், பயங்ககரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது. கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகை சென்றடைய வேண்டும் என்பது காந்தியின் இலக்கு. மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
வளர்ச்சி கிடைப்பதற்காக இன்னமும் நாட்டு மக்களை காத்திருக்க வைக்க முடியாது. இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். எனது கோரிக்கையை ஏற்று மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. உலக நாடுகள் தங்கள் பிரச்சினைகளை இந்தியாவின் வழியில் தீர்வு காண முயல்கிறது.
76 ஆவது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி