பிரதமர் மோடியின் பெயரிலிருந்து 'சவுகிதார்' பட்டம் திடீரென நீக்கம்!
டெல்லி: லோக்சாப தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது பெயருடன் இருந்த 'சவுகிதார்' பட்டம் நீக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களின்போது ஊழல் எதிர்ப்பு கொள்கையை மிக அழுத்தம் திருத்தமாக மக்களிடம் பதிய வைத்து வந்தார் பிரதமர் மோடி. யாரும் ஊழல் புரிய விடமாட்டேன், நானும் ஊழல் செய்ய மாட்டேன். தேசத்தின் காவாலாளியாக இருப்பேன்," என்றும் பேசினார்.
ஊழலுக்கு எதிராக காவாலாளியாக செயல்படுவேன் என்ற கோஷத்துடன், கடந்த மார்ச் மாதம் 16ந் தேதி தனது பெயருக்கு முன்னாள் சவுகிதார் (காவாலாளி) என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டார்.
இதனை பார்த்து பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களும், ஆதரவாளர்களும் தங்களது பெயருக்கு முன்னால் சவுகிதார் என்ற பட்டத்தை போட்டுக்கொண்டனர். சவுகிதார் என்ற வார்த்தை நாடுமுழுவதும் வைரலாக பரவியது.
இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
இந்த சூழலில், தனது பெயருக்கு முன்னால் இருந்த சவுகிதார் என்ற பட்டத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து மோடி நீக்கியுள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் பலருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், சவுகிதார் பட்டத்தை நீக்கியது குறித்து விளக்கம் ஒன்றையும் ட்விட்டரில் கொடுத்துள்ளார். அதில்," சவுகிதார் நிலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தருணம் இது. ஒவ்வொரு கணமும் இதே உத்வேக மனநிலையுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்.
என்னுடைய ட்விட்டர் பக்க பெயரிலிருந்து சவுகிதார் வெளியே போனாலும், இது என்னுடைய அங்கமாகவே மனதில் இருக்கும். இதையே நீங்களும் பின்பற்ற வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.