அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: முதல் நாளே சந்திக்கும் தமிழ் வம்சாவளி விஐபி
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் நாளான நாளையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்திக்கிறார். 24ல் அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்கிறார். அடுத்த நாள் 25ம் தேதி ஐநா கூட்டத்தில் பேசுகிறார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.
குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம்
அதிகாரிகள்
பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஏற்கனவே நியூயார்க் சென்றுள்ளார். பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகளும் அமெரிக்கா செல்கிறார்கள்.
ஜோ பைடன்
கொரோனா பரவ தொடங்கிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இடையில் கடந்த மார்ச் மாதம் தான் இரண்டு நாள் பயணமாக அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சென்று வந்தார். அதன்பிறகு எங்குமே செல்லவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதுவும்
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின்னர், மோடி அமெரிக்கா செல்வது முதல்முறையாகும்.
தனிதனி சந்திப்பு
தனி விமானத்தின் மூலமாக வாஷிங்டன் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். நாளை செப்டம்பர் 23ஆம் தேதி அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-ஐயும் அவர் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.
மோடி பேசுகிறார்
அத்துடன் அன்றைய தினமே இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்சை மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறையாகும்.
நான்கு நாடுகள்
பிரதமர் மோடியின் இந்தப்பயணம் இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுவது ஒருபுறம் எனில், வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
உதவிகள், பயங்கரவாதம்
குவாட் மாநாட்டில், நான்கு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு , பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம் உள்பட பல விஷயங்கள் பற்றி தலைவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
பைடனை சந்திக்கிறார் மோடி
இதனிடையே செப். 24ஆம் தேதி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்ததுல், பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆகிய விஷயங்கள் குறித்து பேச பேகிறார்கள். அத்துடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி பேசுகிறார்
24ம்தேதி அன்று வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். 25ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். . இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்தால் உலகம் எதிர்கொண்டுள்ள சவால்கள், ஆப்கானிஸ்தான் விவகாரம், ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 26ம் தேதி இந்தியா திரும்புகிறார்.