பிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டீ விற்பவராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். அவர் பிரதமராக செய்த சாதனைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
2014 வரை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பிரதமராக மோடி பதவியேற்றார். அதன்பின்னர் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் கடந்த தேர்தலைவிட மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்று 5 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் செய்த சாதனைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி!
செல்லா நோட்டு அறிவிப்பு
பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போதே பேசிய முக்கிய விஷயம் கருப்பு பணம் ஒழிப்பு. அதன்படி கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஒரே நாளில் 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தார். அதற்கு பதில் புதிய 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
இன்னொரு வரலாற்று முக்கியமான விஷயம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 மற்றும் 35ஏ பிரிவினை நீக்கியது. இந்த நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது.
வங்கிகள் இணைப்பு
இன்னொரு முக்கியமான சாதனைகள் என்றால் ஒரே நாளில் கடந்த மாதம் இறுதியில் பொதுத்துறை வங்கிகள் 27ஐ 14ஆக மாற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்த மூன்றும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
வங்கிக்கணக்குகள்
பிரதமர் மோடி தனது ஆட்சியில் ஏழைகள் நலன் சார்ந்த பல திட்டங்களைத்தான் இந்த ஐந்து ஆண்டுகளில் முன்னெடுத்து வந்துள்ளார். பிரதமரின் ஜன் தன் யோஜ்னா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போது 35 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிறகு அரசின்அனைத்து மானியங்களும் நேரடியாக ஏழைகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது
விவசாயிகளுக்கு உதவி தொகை
அமைப்புசாரா துறையுடன் தொடர்புள்ள 42 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, பிரதமரின் ஷ்ரம் யோகி மன் தன் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய வசதி அளிக்கப்பட்டுள்ளது. , வர்த்தகர்களுக்கும் இதேபோன்ற ஒரு ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுகிறது.
உஜ்வாலா திட்டம்
2016ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. 7 கோடி பயனாளிகளுக்கு, பெரும்பாலானவர்களாக பெண்கள் ஆவர். இந்த திட்டம் காரணமாக சமையல் எரிவாயுஇணைப்பு இல்லாத பல ஏழைகள் பயன்பெற்றுள்ளார்கள்.
அனைவருக்கும் வீடு
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லாதிருந்த 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. வீடில்லாத அனைவருக்கும் வீடு என்ற திட்டம் பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன்படி 2014 முதல் 2019 வரையில் 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
‘தூய்மை இந்தியா திட்டம்
இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் பிரதமர் மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம், 2014ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டது 99 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இந்த திட்டம் காரணமாக திறந்தவெளியில் மலம் கழிப்பது இந்தியாவில் பெருமளவு குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அதாவது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் காரணமாக கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி, சேவை வரி என பல வரிகள் இருந்தது நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி என மாற்றப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு
5லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வருமானவரி கட்ட தேவையில்லை என அறிவித்துள்ளது. இதேபோல் வருமான வரி விவகாரத்தில் புதிய சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது.