குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் அதிர்ச்சி அடைந்தது.. பிரதமர் மோடி
டெல்லி: மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 26 தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நம் தேசம் அதிர்ச்சி அடைந்தது என்றார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 72 முறை அவர் நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக பேசி உள்ளார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான 'மன் கி பாத்' என்ற இந்த நிகழ்ச்சி, இன்று காலை ஒளிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், ஜனவரி 26 தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நம் தேசம் அதிர்ச்சி அடைந்தது. இந்த மாதம், கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. ஆரம்பத்தில் தட்டுதடுமாறினாலும், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்று அசத்தியது. நம் இந்திய அணியின் கடின உழைப்பும், அவர்கள் குழுவாக செயல்பட்டதும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இப்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடப் போகிறது, இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எழுத்தாளர்களே உங்கள் எழுத்துங்கள் மூலம் சுதந்திர இயக்கத்தின் மாவீரர்களுக்கு சிறந்த அஞ்சலி செலுத்த முன்வாருங்கள்.
நம் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்களுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் உங்கள் பகுதிகளில் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த வீரம் செறிந்த உண்மை கதைகள் பற்றி புத்தகங்களை எழுதுங்கள். அனைத்து நாட்டு மக்களையும், குறிப்பாக இளம் எழுத்தாளர்களை நான் அழைக்கிறேன்:
சில நாட்களுக்கு முன்பு நான்கு இந்திய பெண் விமானிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு நேரடியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர். கிட்டத்தட்ட 10,000 கி.மீ தூரத்திற்கும் அதிகம் உள்ள இந்த பாதையில் 225 பேருடன் முற்றிலும் பெண் விமானிகள் இயக்கி சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுககள். தற்போது எந்தவொரு துறையாக இருந்தாலும், நாட்டின் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் துறையில் இந்தியா இன்று தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்தியா மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். கொரோனாவிற்கு எதிராக பாரதத்தின் போராட்டம் எடுத்துக்காட்டாக ஆகியுள்ளதோ அதுபோல் நமது தடுப்பூசித் திட்டமும் உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.நாங்கள் (மத்திய அரசு) உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், எங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்.
வரும் 14ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
கேரளாவின் கோட்டையத்தில் என்.எஸ்.ராஜப்பன் என்ற வயதான நபர் இருக்கிறார். பக்கவாதம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. ஆனால் தூய்மை குறித்த அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு கொஞ்சமும் குறையவில்லை.. பல ஆண்டுகளாக தனது படகை வேம்பநாத் ஏரியில் ஓட்டும் அவர், அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கிறார். கற்பனை செய்து பாருங்கள், அவருடைய இலட்சியங்கள் எவ்வளவு உயர்ந்தவை" இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்