வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கே அதிகாரம்... எங்களை நம்புங்க... விவசாயிகளை சமாதானப்படுத்தும் மோடி!
டெல்லி: வேளாண் சட்டங்கள் விவசாயத்தை ஊக்குவிக்கவே கொண்டு வரப்பட்டது என்றும், இதனால் விவசாயிகளுக்கு புதிய சந்தைகள் கிடைக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வேளாண் துறைக்கும், அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் சுவர்கள் போல் நிறைய தடைகள் வேளாண் சட்டங்கள் மூலம் அகற்றப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் நிலையில் மோடி இவ்வாறு கூறி உள்ளார்.வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து, ,அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் இருபது நாளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கூறி விட்டது. விவசாயிகளும் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என தெரிவித்து விட்டனர்.
மோடி பேச்சு
இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில், வேளாண் சட்டம் விவசாயத்தை ஊக்குவிக்கவே கொண்டு வரப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
போரிட்டோம்
20- 20 போட்டிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து வருகிறோம். ஆனால், 2020ம் ஆண்டு மிகவும் குழப்பம் நிறைந்தது. நம் அனைவரையும் தடுமாற வைத்து உள்ளது. நமது நாடு மட்டும் அல்லாது ஒட்டு மொத்த உலகமும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டது.இப்போது இருக்கும் கரோனா சூழலை சில ஆண்டுகள் கழித்து நினைத்தால் நம்மால் அதை நம்ப முடியாது. கொரோனா என்னும் தெரியாத எதிரியுடன் போரிட்டோம்.
வெற்றி கண்டோம்
கொரோனாவால் அனைத்து துறைகளிலும் நிச்சயம் அற்ற தன்மை நிலவியதால் இது எத்தனை நாள் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நாம் அனைத்தையும் முறியடித்து விட்டோம். டிசம்பர் மாதத்திற்குள் முன்பிருந்த மோசமான நிலைமை மாறிவிட்டது. நெருக்கடியின் போது தேசம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்கால திட்டங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
முதலீடு அதிகரிப்பு
கடந்த ஆறு வருடங்களில் உலகம் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை கடந்த சில மாதங்களில் மேலும் வலுவடைந்து உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்தனர். தொடர்ந்து முதலீடு செய்கின்றனர்.
செயல் திறனை ஊக்குவிக்கிறது
ஆத்மனிர்பர் பாரத் அபியான் திட்டம் ஒவ்வொரு துறையிலும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் நீண்டகால போட்டி நன்மை உள்ள துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மீண்டும் உற்சாகப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நல்லது
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை ஏற்படுத்தி கொடுக்கும். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அணுக உதவும். விவசாயத்தில் புதிய முதலீடுகளை கொண்டு வர உதவும்.
விவசாயிகளுக்கு அதிகாரம்
வேளாண் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு கிடங்கு என வேளாண் துறைக்கும், அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் சுவர்கள் போல் நிறைய தடைகள் இருந்தன. வேளாண் சட்டம் மூலம் தற்போது அந்த தடைகள் அனைத்தும் தகர்த்து எறியப்பட்டுளன. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு அதிக நன்மை கிடைக்கும். விவசாயிகளின் வருமானம் உயரும் விவசாயிகள் கூடுதல் அதிகாரம் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.