நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச உணவு பொருட்கள்.. 80 கோடி மக்கள் பயன்.. பிரதமர் அறிவிப்பு
டெல்லி: நவம்பர் மாதம் வரை ரேஷனில் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்ற நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பிறந்த சீனாவை விட இந்தியாவில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 ஆவது முறையாக லாக்டவுனை நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார். அப்போது அவர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட காலத்தில் அன்லாக் 2-ல் நாம் நுழைகிறோம்- மக்கள் கவனமாக இருக்க வேண்டும். உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா போர் களத்தில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
கொரோனா உடன் போராடும் யாரும் பசியோடு உறங்கக்கூடாது - நவம்பர் வரை கரீப் கல்யாண் திட்டம்
எச்சரிக்கை
அன்லாக் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைய ஆரம்பித்துவிட்டது. பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பொதுமக்கள் சாதாரணமாக கருத வேண்டாம்.
ஜன்தன் வங்கிக் கணக்குகள்
லாக்டவுனை நாம் பல இடங்களில் சரியான முறையில் பின்பற்றாமலும் இருந்திருக்கிறோம். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவில் நிலைமை மிகவும் சீராகவே உள்ளது. 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் ரூ31,000 கோடி கொடுத்திருக்கிறோம்.
மேம்பாடு
பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்துக்குட்பட்டவர்கள். அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்திய மக்கள் 2 மடங்கு அளவில் பயனடைந்துள்ளனர். வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ50,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். ஏழைகள் மேம்பாட்டுக்காக ஏற்கனவே ரூ1.75 கோடி திட்டத்தை அறிவித்துள்ளோம்.
5 கிலோ கோதுமை
பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மேலும் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை விரிவுபடுத்தப்படும். அதாவது நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேஷனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும். 5 கிலோ கோதுமை அல்லது 5 கிலோ அரிசி, ஒரு கிலோ கடலை பருப்பு வழங்கப்படும். மொத்தமாக அன்னயோஜனா திட்டத்திற்கு 1.5 லட்சம் கோடி செலவாகிறது.
தீபாவளி
தற்போது இலவசமாக வழங்கப்படுவதால் கூடுதலாக ரூ 90 ஆயிரம் கோடி செலவாகும். நேர்மையாக வரி செலுத்தியவர்கள்தான் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முடிந்தது. குடும்பங்களின் தேவைகளும், செலவுகளும் அதிகரிக்கும் நேரம் இது. அதாவது அடுத்தடுத்து தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் நவம்பர் வரை ரேஷனில் இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல்
இதனிடையே இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அம்மாநில அசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் நவம்பர் மாதம் வரை ரேஷனில் பொருட்கள் இலவசமாக கிடைக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.